பள்ளி, கல்லுாரிகளின் தேர்வுகளுக்கு, ஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை; அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவும் முடியாது, என, தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பள்ளி, கல்லுாரி தேர்வெழுத, மாணவர்கள் ஆதார் கார்டு தகவல்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று, அரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை; அப்படி உத்தரவு பிறப்பிக்கவும் சாத்தியமாகாது.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டுமானால், ஆதார் கார்டு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்று, பெங்களூரு நகர் மாவட்டத்தின் கல்வித்துறை துணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து, என் துறையின் முதன்மை செயலர், உத்தரவு பிறப்பித்த துணை கமிஷனரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.அரசு அளவிலோ, கல்வித்துறை சார்பிலோ, பள்ளி, கல்லுாரி தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயத்தை பற்றி, எந்த விவாதமும் நடக்கவில்லை. இது தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைய வேண்டாம். மாநிலத்தில் பெரும்பாலானோருக்கு இன்னும் ஆதார் கார்டு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு ஆஜராக, ஆதார் கார்டு விவரங்களை தாக்கல் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.