வீடு, மனை வாங்குவோர், அதற்கான வில்லங்க சான்றிதழ் கோரி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வீடு, மனை வாங்கியவர்கள், புதிதாக வாங்குவோர், சொத்தின் முந்தைய பரிமாற்ற விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியம். 'வில்லங்க சான்றிதழ்களை பெற, பொது மக்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பதிவுத்துறை அறிவித்தது.
ஆனால், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை ஏற்பதில்,சார் பதிவக பணியாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், பதிவுத்துறை இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: பதிவுத்துறை அறிவிப்பின்படி, 1975ம் ஆண்டு முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள், வில்லங்க சான்றிதழில் இடம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில், 1987 முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
இதிலும், சொத்தின் சர்வே எண், அதன் இருப்பிடம், விண்ணப்பதாரர் குறித்த விபரங்கள் தான் அவசியம். ஆனால், தற்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது, சொத்தின் பரப்பளவு குறித்த விபரம் கேட்கப்படுகிறது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால், சாதாரண மக்கள் குழப்பம் அடைகின்றனர்.
எனவே, ஆன்லைன் முறையில், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்