தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.
தமிழக அரசு துறைகளில்
காலியாகும் இடங்களுக்கு, தமிழக அரசின் பணி நியமன
அமைப்பான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டித் தேர்வு நடத்தி, ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த 2013-14ல், 79 வகையான பதவிகளுக்கு, 16 ஒருங்கிணைந்த தேர்வுகளை
டி.என்.பி.எஸ்.சி.,நடத்தியுள்ளது. அவற்றில், 14,600 காலியிடங்களுக்கு, 41 லட்சம் பேர் தேர்வு
எழுதியுள்ளனர்; பெரும்பாலான முடிவுகள்
வெளியிடப்பட்டு விட்டன.
சில தேர்வுகளுக்கு
முடிவுகள் வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இடஒதுக்கீட்டில் பிரச்னை
ஏற்பட்டு, வழக்கு தொடர்வதும்
தொடர்கதையாக உள்ளது. தேர்வு முடிவு தாமதத்தை தவிர்த்தல்; வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல்; இடஒதுக்கீட்டு முறையில் தெளிவான நிலை
போன்றவற்றுக்காக, டி.என்.பி.எஸ்.சி., புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
அதற்காக, புதிய கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டு
உள்ளது. விடைகளை கணினி வழியே எளிதாக, விரைவாக, தெளிவாக திருத்துதல்
மற்றும் 50க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளுக்கு,இடஒதுக்கீட்டை முறையாக வழங்க இந்த மென்பொருள்
உதவும். இந்த திட்டம், இன்னும் ஒரு மாதத்தில்
அமலாக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட
டிஜிட்டல் திட்டத்தின் மூலம், இடஒதுக்கீடு
குளறுபடியின்றி, தேர்வு முடிவுகளும், இறுதித் தேர்வும் தாமதமின்றி அறிவிக்கப்படும்
என,டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரங்கள் தெரிவித்தன.