தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அங்கு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் புதிதாக துவங்கிய 12 கல்லுாரிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட அரசு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்விடங்களில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு முதல்வர்களால் வளர்ச்சி பணிக்கான திட்டங்களுக்கு முக்கிய முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் பெரும்பாலான கல்லுாரிகளில் ஆய்வகம், கூடுதல் வகுப்பறை இன்றி, மரத்தடியை வகுப்பறைகளாக மாற்றும் சூழல் உள்ளது. நிதி ஒதுக்கீடு இன்றி ஆய்வக செயல்பாடு, நுாலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பொறுப்பு முதல்வர்கள் நிர்வாக பணிகளை கவனிப்பதால், அவர்கள் சார்ந்த வகுப்புக்களை எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு போன்ற சில கோப்புகளில் கையெழுத்திட தயங்குகின்றனர்.
கல்லுாரி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கிரேடு 1 அந்தஸ்து பெற்ற 10கல்லுாரிகளிலும், கிரேடு 2வில் 22 கல்லுாரிகளிலும் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக்கல்லுாரிகளில் நிரந்தர முதல்வர்களை நியமிக்க வேண்டும். கிரேடு 2வில் இருந்து 1க்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். இதன் பின், கிரேடு 2 காலி இடம் உட்பட அனைத்து காலியிடங்களுக்கும் நிரந்தர முதல்வர்களை நியமிக்க வேண்டும், என்றார்.