மாநகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், அடுத்த மாதம் வளாக நேர்காணல் வாயிலாக மாணவர்களை தேர்வுசெய்ய அதிக முனைப்பு காட்டிவருவதால், கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி துறை சார்பில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள, 109கல்லுாரிகளில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையிலுள்ள, ஆறு பேர் கொண்ட குழு, இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கிவருகிறது.
இதன்மூலம், வளாக நேர்காணலை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, www.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில், வழிகாட்டித் துறை சார்பில் வேலை பெறும் முறைகள்,நேர்காணல் குறிப்புகள், தலைமை பண்பு உட்பட, 20க்கும் மேற்பட்ட குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலையுடன் பதிவுசெய்துள்ள, பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தில், மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள், தொழில் முனைவோர் என,தனித்தனியாக பதிவுசெய்து, வேலைவாய்ப்பு குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வளாக நேர்காணலின் போது மாணவர்களுக்கு, ஓராண்டு வரை இதன்மூலம் அழைப்பு விடுக்கப்படும். பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களும் மாணவர்கள் தேவையை இந்த இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்துவிடும்.
இந்நிலையில், இவ்வாண்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்ய அதிக முனைப்பு காட்டி வருவதால்,கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டித் துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கோவை, ஈரோடு,சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டை விட, இவ்வாண்டு கூடுதலாக, 2௦ சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்ய முன்வந்து, நேர்காணல் தேதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. அக்., மாதத்தில் பகுதி ரீதியாக, கல்லுாரியில் வளாக நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, இவ்வாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.