உலக விண்வெளி வார விழாவையொட்டி, மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
உலக விண்வெளி வார விழா அக். 4 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
8ஆம் வகுப்பு வரை, "விண்வெளித் தொழில்நுட்பமும், அதன் பயன்களும்', 10ஆம் வகுப்பு வரை "பூமியைப் போன்ற உலகங்களைத் தேடுவோம்', பிளஸ் 2 வரை "விண்வெளி ஆய்வில் சந்திரன், செவ்வாயும் அதற்கு அப்பாலும்'. ஆங்கில வழிக் கல்விக்கும் இது பொருந்தும்.
ஏ 4 தாளில் பக்கத்துக்கு 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒரு பக்கம் முறையிலும் கட்டுரையை எழுதியிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர், வயது, பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களும், தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதமும் அவசியம்.
உறையில் "கட்டுரைப் போட்டி' எனக் குறிப்பிட்டு, நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திரவ இயக்க அமைப்பு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி-627133 என்ற முகவரிக்கு இம்மாதம் 30-க்குள் அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு, மகேந்திரகிரியில் அக்டோபர் மாதம் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் 5 நிமிட பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
தலைப்பு விவரம்: 8ஆம் வகுப்பு வரை "நான் விண்வெளி விஞ்ஞானி ஆகினால்', 10ஆம் வகுப்பு வரை "விண்ணில் ஆய்வும் மண்ணில் பயன்களும்', பிளஸ்2 வரை "விண்வெளியின் விந்தைகளுக்கு விடையளிப்போம்' ஆகிய தலைப்புகளில் பேச வேண்டும்.
இப்போட்டி அடுத்த மாதம் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும். ஒரு பிரிவுக்கு ஒரு மாணவர் வீதம் பள்ளிக்கு 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். பள்ளிகள் மூலமாகவே அக். 7-க்குள் தங்கள் பெயரை மேற்கூறிய முகவரியிலேயே பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04637-281210, 281940 ஆகிய தொலைபேசி எண்கள், 94421-40183, 94866-92236 ஆகிய செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.