உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல் வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை,அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,நடுநிலைப்பள்ளிகளாக இருந்து, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்ந்தப்பட்டவைகளுக்கு, தனி வளாகம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைபடுகின்றன. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளன.
இதனால், துவக்கப்பள்ளியும், உயர்நிலை வகுப்புகளும் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. சில பள்ளி கட்டடங்கள்,பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், வகுப்பறை வசதி மேற்கொள்ள, கல்வித்துறைக்கு அனுமதி கிடைப்பதில்லை. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை, கல்வித்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றியமைத்தால் மட்டுமே, உரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையே உள்ளது.