உ.பி., மாநிலத்தில், காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களுக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 255 பேர், இன்ஜினியரிங், அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள்.
உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான,சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ளது. சமீபத்தில், உ.பி., தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த பணிக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 255 பேர், இன்ஜினியரிங், அறிவியல், வணிகம் ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள். பல்வேறு பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்ற, 25 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இன்ஜினியரிங் பாடத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அலோக் சவுராசியா கூறியதாவது: வேலையில்லாமல் இருப்பதை விட, ஏதாவது ஒரு வேலை பார்ப்பது நல்லது என்பதால்,பியூன் வேலைக்கு விண்ணப்பித்தேன். இதில், எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. மாதந்தோறும், 16ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதிகம் படித்துள்ளவர்கள், பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளது, தற்போதுள்ள அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
இன்ஜினியரிங் படித்தவர்களிடம், கோப்புகளை எடுத்து வா; டீ வாங்கி வா என, உத்தரவு போட முடியாது. ஆர்வம் காரணமாக இந்த வேலைக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், பணியில் சேர்ந்தபின்,தங்களுக்கு அவமதிப்பு ஏற்படுவதாக, அவர்கள் கருத வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.