மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று சார்பு நீதிபதி விஜயகாந்த் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சட்ட உதவி விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிபதி விஜயகாந்த் பேசியதாவது: சட்டம் என்பது மற்றவர்களை பயமுறுத்துவதற்கு கிடையாது. நமது பாதுகாப்பிற்காக சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஒவ்வொரு சட்டமும் எதற்காக இயற்றப் படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தை அமைதி படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், விதிமுறைகளுடன் கடைபிடிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும். அவற்றிற்கு சட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்.
எவ்வித பிரச்னையாக இருந்தாலும், நாம் கையில் எடுக்க கூடாது. சட்டத்தின் (கோர்ட்) மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். மாணவ, மாணவிகள், தங்களின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எவ்வித பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்கு கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிகள் குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் மனித நேயம் மிக்கவர்களாக தங்களை உருவாக்கி கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். இவ்வாறு சார்பு நீதிபதி விஜயகாந்த் பேசினார்.