சீனாவிலுள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அறிந்து கொள்ள, இந்தியாவில் இருந்து, 19 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில்,கரூர் மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, சீனா சென்றிருந்த போது, கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துள்ள,மாணவர்களை சீனாவுக்கு அனுப்பி வைப்பது என்றும், அதேபோல் சீன மாணவர்கள், இந்திய வரவும் முடிவு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியா -சீனா இடையே நட்புறவு பரிமாற்றத்தின் முதல்கட்டமாக,இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த, 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், தமிழகத்தில் இருந்து, மூன்று பேர் இடம்பெற்றனர். மாணவி ஸ்ரீநிதி, 17, கரூரைச் சேர்ந்தவர். பரணி வியாலயா மேல்நிலைப்பள்ளியில் (சி.பி.எஸ்.சி.,) வணிகவியல் பிசினஸ் ஸ்டடீஸ் பிரிவில் பயின்று வருகிறார். இவர், கரூர் நாரதகான சபாவில் தொடர்ந்து, 16 மணிநேரம் வீணை இசைத்து சாதனை படைத்தார். குழந்தைகளுக்கான மத்திய அரசின் சாதனை விருதும் பெற்றுள்ளார். இவரது தந்தை கார்த்திகேயன், 50. இவரது மனைவி கல்பனா, 45. இவர்கள், வெங்கமேட்டில் வசிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மூவரும், சென்னையில் இருந்து கடந்த, 15ம் தேதி டில்லி சென்றனர். அங்கிருந்து அனைவரையும் ஒன்றிணைத்து, இந்திய அரசு தன் சொந்த செலவில், சீனாவுக்கு அனுப்பி வைத்தது. கல்வி, சுற்றுச்சூழல்,புராதனம், கைவினைப்பொருட்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அறிந்து கொள்வதே இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. சீனாவில் இருந்து மாணவ, மாணவியர், கடந்த, 20ம் தேதி இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
மாணவி ஸ்ரீநிதி கூறியதாவது: சீனாவில் முதியோர் எண்ணிக்கை எதிகம். இளைஞர்கள் எண்ணிக்கை குறைவு. சுற்றுச்சூழலில் சீனர்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். வாகனங்களில் புகையோ, சத்தமோ வருவதில்லை. கல்வியைப் பொறுத்தவரை செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்கள் அனைவரும் அன்போடு பழகுகின்றனர். மாலை, 4.30 மணிக்கு மேல் உணவகங்கள் திறப்பது இல்லை. நம்நாட்டில் சைனீஸ் உணவாக காணப்படுவது எதுமே, அவர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், அங்கு தரப்படும் உணவு மிகவம் சுவையாக உள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர், ஒரே சாலையில் பல வழி தொங்கு பாதை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில், எனக்கு தமிழிலும்,ஆங்கிலத்திலும் உள்ள ஜி.யு.போப் ஆங்கில உரையுடன் கூடிய, கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் வழங்கிய, திருக்குறள் நூல்களை அங்கு விளக்கம் சொல்லியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவ்வாறு, அவர் கூறினார்.