''நதிநீர் இணைப்புக்காக, ஏற்கனவே சொன்னபடி, வங்கியில், ஒரு கோடி ரூபாயை ரஜினி, 'டிபாசிட்' செய்து விட்டார். பணிகள் துவங்கியதும், ஒப்படைக்கப்படும்,'' என, ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா தெரிவித்தார்.
சிறப்பு பூஜை : கடந்த, 2002ம் ஆணடு, 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதத்தின் முடிவில், நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு, தன் சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். தற்போது, 'நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில், தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், 'நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு நடிகர் ரஜினி, ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருந்தார். அதை, பிரதமர் மோடியிடம் வழங்க வலியுறுத்தி,ரஜினியை சந்திப்பது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா, தன் மனைவி மற்றும் நண்பர்களுடன், நேற்று முன்தினம் கும்பகோணம் கோவில்கள் மற்றும் திருநாகேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, நேற்று காலை அவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அம்மன், சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வழிபட்டார்.
சொன்னால் சொன்னபடி... : பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''ரஜினி உடல் நலம் பெறவும், உலக மக்கள் அமைதிக்காகவும் வேண்டி பூஜை செய்து வருகிறேன். ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, நலமுடன் உள்ளார். அவர் நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருந்தார். ''அறிவித்தபடி அத்தொகையை வங்கியில் ஏற்கனவே, 'டிபாசிட்' செய்து விட்டார். நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார். சொன்னால் சொன்னபடி செய்வார்; அது தான் ரஜினிகாந்த்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.