GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 30 ஜூன், 2016

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வாட்ஸ் அப் உள்ளிட்ட பயன்பாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து ஹரியாணாவைச் சேர்ந்த தகவலறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக, செல்லிடப்பேசிகளில் ஒருவருடன் ஒருவர் உரையாடவும் அல்லது பல பேர் ஒரே நேரத்தில் உரையாடிக் கொள்ளவும், தகவல்கள் மற்றும் விடியோ படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் "வாட்ஸ் - அப்' போன்ற 20 வகையான செயலிகள் இருக்கின்றன.
இவற்றை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் ஆகியோர் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுபோன்ற சமயங்களில், இந்த தகவல்களை காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் பெற முடிவதில்லை.
வாட்ஸ் - அப் போன்ற செயலிகளை வழங்கும் நிறுவனங்களின் ரகசிய குறியீடுகள் தெரியாமல், அந்தத் தகவல்களைக் காண்பது இயலாத காரியமாகும். எனவே, இந்தச் செயலிகள் யாவும் நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குகிறது.
மேலும், 1885-ஆம் ஆண்டின் இந்தியத் தந்தி சட்டம், 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் இந்தச் செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் "வாட்ஸ் - அப்', "ஹைக்', "வைபர்', "டெலிகிராம்' போன்ற பயன்பாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சுதிர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு மீது எந்த விசாரணையும் நடத்தாமல் அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த அரசு அமைப்புகளிடம் மனுதாரர் அணுகலாம். இல்லையெனில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (டிடிஎஸ்ஏடி) முறையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.