தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
வியாழக்கிழமை நிறைவுபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 555 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
2016-2017-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் ஜூன் 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 757 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 722 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 519 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 225 பேருக்கும், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
இதுதவிர சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 233 பேருக்கும், அரசு பிடிஎஸ் இடங்கள் 46 பேருக்கும் ஒதுக்கப்பட்டது.
மூன்று நாள் கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 555 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 197, அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 36 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 970 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மீதம் உள்ளன.
முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 23-ஆம் தேதி நிறைவடையும். வெள்ளிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வுக்கு கட்- ஆஃப் மதிப்பெண் 196-லிருந்து 195.25 வரையுள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.