அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வெளியிட்டார்.
இதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.இவர், மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் பள்ளியில், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த முதல் பாடப்பிரிவில், பிளஸ் 2படித்துள்ளார்.
பொதுத்தேர்வில், 1,198 மதிப்பெண் மற்றும் 200க்கு200 கட் - ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்,இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஈரோடு, ஐடியல் பள்ளியில் படித்த இவர், மருத்துவ தரவரிசையில் இரண்டாவது இடம் பெற்று, சென்னை எம்.எம்.சி., கல்லுாரியில் சேர்ந்ததால், இன்ஜி., படிப்பில் சேரவில்லை என, தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டு இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள். மருத்துவ தர வரிசையிலும், கேரளாவில் படித்த, ஆர்த்தி என்ற மாணவி, தமிழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.