சென்னை போலீசார் இரவு ரோந்து செல்ல சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில், சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 'போலீசார் இரவு ரோந்து செல்லாததே, குற்றங்கள் அதிகரிக்க காரணம்' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசார் அனைவரும், இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். ஆனால், அதில் ரோந்து செல்ல தயங்கி வருகின்றனர். இதற்கு, பெட்ரோல் செலவு முக்கிய காரணம். மேலும், இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்வோர், வேகமாக ஒவ்வொரு தெருவையும் கடந்து விடுகின்றனர். இதனால், ரோந்து செல்லும் பகுதியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்யாததால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு குறைகிறது.
இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சென்னை மாநகர போலீசாருக்கு, சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சைக்கிளில் ரோந்து செல்வதால், எரிபொருள் செலவு மிச்சமாகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறுகிய தெருக்கள் வழியாகவும், சைக்கிளில் செல்ல முடியும். ஆங்காங்கே நின்று மக்களிடம் பேச முடியும்; பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும். குற்றவாளிகள் குறித்த தகவல்களை எளிதாக பெற முடியும். ரோந்து செல்லும் போலீசார், அப்பகுதியில் ஏதேனும் குற்றம் நடப்பதை அறிந்தால், உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், வாகனங்களில் ரோந்து செல்லும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விடுவர்.
போலீசாருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, 250 போலீசாருக்கு ரோந்து சைக்கிள்களை வழங்குகிறார்.
டிரைவர்கள் அதிகரிப்பு : காவல் துறையில் தற்போது, 24 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும், இரண்டு போலீசார் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவும் ஆள் பற்றாக்குறைக்கு பெரும் காரணமாக உள்ளது.