அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் தொழிற்பயிற்சிகளில் சேர வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர்க்கென இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி , பிளஸ்2 தேர்ச்சி தோல்வி மற்றும் பட்டப்படிப்பு முடித்த மகளிர்களுக்கு கணிணி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர்., டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் ஆகிய இரு தொழிற்பிரிவுகளில் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர வயது வரம்பு கிடையாது.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி நிறைவு செய்தபின் மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழில்சான்று வழங்கப்படும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், கம்மியர், பொருத்துநர் போன்ற தொழிற்பிரிவுகளிலும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்பியாள் தொழிற்பிரிவிலும் தொழிற்யிற்சி அளிக்க கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த தொழிற்பயிற்சிகளில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), பரமத்தி சாலை, தட்டாங்குட்டை, நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286-267976 என்ற தொலைபேசி எண் அல்லது 9443328279 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.