அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கடந்த, 23ல் துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு
மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. நாளை முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும்; ஜூலை, 23, 24ம் தேதிகளில்
தொழிற்கல்வி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. மொத்தம், 524 கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
தினமும் காலை, 7:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, எட்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு வரும் மாணவியர் பெண் துணையுடன் வந்தால், அவர்கள் தங்குவதற்கு பல்கலை வளாகத்தில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்கான அழைப்பு கடிதங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் அதைப் பார்த்து, குறிப்பிட்ட நேரத்துக்கு, இரண்டு மணி நேரம் முன் பல்கலை வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல்கலை வளாகத்தில் விசாரணை மையம், உடற் பரிசோதனை மையம் மற்றும் கல்லூரி வைப்புத் தொகை செலுத்துவதற்கான வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு வங்கிகளின் சார்பில், கடன் வசதிக்கான உதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளே 50 சதவீதம் காலி : முதல் நாளில் நடந்த கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவில் காலியான, 500 இடங்களுக்கு, 1,195 பேர் அழைக்கப்பட்டனர்; 174 பேர் வரவில்லை.
வந்தவர்களில், 669 பேர் விருப்பமான இடம் மற்றும் பாடப்பிரிவு கிடைக்காமல், 'இடங்கள் வேண்டாம்' என்று ஒதுக்கி விட்டனர். வெறும், 352 பேர் மட்டுமே இட ஒதுக்கீடு ஆணை
பெற்றனர்.