பள்ளிச்சீருடை இல்லாமல் பஸ்சில் பயணம் செய்தால்,அவர்களது பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளி மாணவர்கள், பள்ளி செல்ல வசதியாக அனைத்து மாணவர்களுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டில், மாணவர்களுக்கு பஸ் பாஸ் இன்னும் வழங்கப்படவில்லை. துவக்கப்பள்ளி மாணவர்கள் முதல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும், அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: அந்தந்தப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர் மூலம் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெறும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கல்லுாரியை பொறுத்தவரை முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பம் பெற்றவுடன் அவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்படும்.
பிற மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வரும் வரை, பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தி, அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். பள்ளிச்சீருடை இல்லாமல் பஸ்சில் பயணம் செய்தால், பழைய பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.