பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''20 செயற்கைக்கோள்களில் கார்டோசாட் -2 என்ற செயற்கைக்கோள் மிக முக்கியமானது ஆகும். இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் கடல்வழிப் போக்குவரத்து, கண்காணிப்பு, வரைபடம், நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்க பயன்படும்.
இது தவிர 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இரண்டு கல்வி நிறுவனத்தின் செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ''உங்களுக்கும் இஸ்ரோவில் உள்ள மற்ற விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த சாதனைக்கு காரணமான விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இது போன்ற சாதனைகளை இஸ்ரோ தொடர்ந்து நிகழ்த்த வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்'' என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.