நலவாரிய நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தை களுக்கு கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், புத்தகங்கள் வாங்க பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படு கிறது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த கல்வி உதவித் தொகை பெற இந்தாண்டு அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நலத்திட்ட விவரம், விண்ணப்பம் பெற, ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718,தேனாம்பேட்டை, சென்னை- 6’ என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது தொழிலாளர் நலவாரியத்தின் 044-2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ‘www.labour.tn.gov.in’ என்ற இணையதள முகவரி மூலமும் விவரங்கள் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.