ரூ 4 லட்சம் மதிப்பிலான அரசு பாடப்புத்தகங்களை பழைய விலைக்கு விற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் தொடக்கப்பள்ளிகளுக்கு கடந்த கல்விஆண்டில் வழங்கப்பட்டது போக மீதமுள்ள பாடப்புத்தகங்கள் புல்லுக்கட்டுவலசையில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வகுப்புகள் துவங்கிய போது அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க, அதிகாரிகள் கேட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை காணவில்லை. மொத்தம் 6 ஆயிரத்து 900 புத்தகங்களாகும்.
இவற்றின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கும், தமிழக தொடக்க கல்வி இயக்குநருக்கும் புகார்கள் அனுப்பின. அதில், கீழப்பாவூர் யூனியன் உதவி தொடக்க கல்வி அலுவலரான அம்புரோஸ்,
புத்தகங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்துவிட்டார் என புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து மாநில தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிர்மலா ஜேசு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
புத்தகங்களை விற்பனை செய்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்புரோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.