சென்னையில், 1,366 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று துவக்கி வைத்தார்.
அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகரங்களை ஏற்படுத்த, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, 100 நகரங்கள் தேர்வாகி உள்ளன. முதல்கட்டமாக, 20 நகரங்களில் இந்த திட்டத்தை, புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். புனேயில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் கந்தசாமி, மாநகராட்சி சிறப்பு திட்டங்கள் துறை செயற்பொறியாளர்கள் பாபு,
ஜெயகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில், காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் சந்திரமோகன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர், மாநகராட்சி வட்டார துணை
கமிஷனர்கள் ஆகியோர் பங்கேற்றனர். திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் காணொலி காட்சி மூலம், 20 நகரங்களின் சிறப்பு குழு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசினார். இந்த, 20 நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது. சென்னையில், தி.நகர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டமைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், துப்புரவு பணிகள், நடைபாதை, மோட்டார் வாகனம் இல்லா போக்குவரத்து, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, பசுமையான திறந்தவெளி பூங்காக்கள் ஆகிய கட்டமைப்புக்களை உருவாக்க, இந்த திட்டத்தின் கீழ் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,366 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த, ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்த நிதியாண்டில் துவங்கப்பட்டு, வரும் 2019 - 20ம் நிதியாண்டிற்குள் முடிக்கப்படும். அரசு திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு வழங்கும். மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் இதே அளவு பங்களிப்பு தொகையை, திட்டத்திற்கு செலவழிக்க வேண்டும். திட்டத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் துவக்கி வைத்திருப்பதால், சென்னை தி.நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னையின் வர்த்தக பகுதியான தி.நகர் உலகத்தர நகராக மாறப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
ஸ்மார்ட் சிட்டிக்கு சிறப்பு குழு! : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த, 'ஸ்மார்ட் சிட்டி நிறுவனம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி கமிஷனர் தலைவராகவும், அவருக்கு கீழ், 13 பேர் இயக்குனர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில், இந்த நிறுவனம் செயல்படும்.
இந்நிறுவனத்தின் உறுப்பினர்களின் ஆய்வு கூட்டம், மாதம் தோறும் நடைபெறும். திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து இந்த குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும்.