போலி, 'இ - மெயில்' வருமான வரி எச்சரிக்கை
'வருமான வரி செலுத்துவோருக்கு, திரும்ப பெறப்படும் தொகை குறித்து, 'இ - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, இணைய இணைப்பு link அனுப்பப்படுவதில்லை' என, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திரும்ப பெறப்படும் தொகை குறித்து, வருமான வரி செலுத்துவோருக்கு, இ - மெயில் மற்றும் மொபைல் போன் குறுந்தகவல் வாயிலாக, இணைய இணைப்பு அனுப்பப்படுவதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று வரும், இ - மெயில் மற்றும் குறுந்தகவல்கள் போலியானவை.
அவற்றை, வருமான வரித் துறை அனுப்பவில்லை.மேலும், 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' ஆகியவற்றின் ரகசிய எண்கள் அல்லது ஆதார் எண் போன்றவற்றை, இ - மெயில், குறுந்தகவல் மற்றும் தொலைபேசி வாயிலாக, வருமான வரித் துறை கேட்பதில்லை.வருமான வரி செலுத்துவோர், தங்களது முகவரி, வங்கி கணக்கு எண் போன்ற தனிநபர் தகவல்களை, வருமான வரித் துறையின், www.incometaxindiaefiling.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், வருமான வரி செலுத்துவோருக்கு, துறை வழியாக அனுப்பப்படும், இ - மெயில் மற்றும் குறுந்தகவல் பட்டியலும், இதே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, வருமான வரி செலுத்துவோர், போலி, இ - மெயில் மற்றும் குறுந்தகவல்களை நம்பாமல், எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.