பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவதற்காக, பி.எட்., தேர்வு தேதியை மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று முன்தினம் அறிவித்தது.ஜூன், 8, 9ம் தேதிகளில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில் உள்ள, பி.எட்., கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியர், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், ஜூன், 8,9ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.மாணவ - மாணவியர் படிக்கும், பி.எட்., படிப்புக்கான இறுதியாண்டு தேர்வு, மே, 29 முதல், ஜூன், 13 வரை நடத்தப்படுகிறது.தகுதித் தேர்வு நடத்தப்படும், ஜூன், 8ல், பி.எட்., மாணவர்களுக்கு முக்கிய பாடத்துக்கான தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ளதால், டெட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.இது குறித்து, மாணவர்கள் தரப்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால், பி.எட்., தேர்வு தேதியை, 8ம் தேதியில் இருந்து, 13ம் தேதிக்கு மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.