ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு 'அப்டேஷன்' கொடுக்கப்படுவதால், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை) பதிவேற்றம் இன்னமும் முடிந்தபாடில்லை.மாணவர் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களும் அடங்கிய 'எமிஸ்' பதிவேற்றத்தில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பதிவேற்றம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. திட்டம் தொடங்கியபோது கணினி, இணைய வசதி இல்லாததால், பள்ளிகள் இதில் அதிகம் அக்கறை காட்டவில்லை.தற்போது மாணவர்களுக்கு 'டிசி', ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, நலத்திட்டங்கள் என அனைத்தும் 'எமிஸ்' வழியே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது பள்ளி கல்வி துறை.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 2011-ம் ஆண்டு எமிஸ் பதிவேற்றம் தொடங்கினாலும், 2013-ம் ஆண்டில்தான் ஆசிரியர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் பெயர், பள்ளி, வகுப்பு என ஒரு சில விபரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு 'அப்டேஷன்களை' கொடுத்து கொண்டே இருப்பதால் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. மாவட்ட அதிகாரிகள் 90 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினாலும், 70 சதவீத பணிகளே முடிந்துள்ளன.தற்போது மாணவர்களின் ஆதார் எண், அங்க அடையாளங்கள், தாயார் பெயர், ரத்த வகை என பல்வேறு வகை விபரங்களை பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இன்னும் எதையெல்லாம் 'அப்டேஷன்' செய்ய சொல்ல போகின்றனரோ தெரியவில்லை, என்றார்.