சி.டி.இ.டி., எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ.,க்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
சி.டி.இ.டி., எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளனர்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில், பொதுப் பிரிவில் இருந்து, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது; அது, தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. இந்த ஒதுக்கீட்டை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் அளித்த உத்தரவில், 'இது தகுதித் தேர்வு தான். இதற்கு, எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது
.'பணி நியமனத்தின் போது தான், இட ஒதுக்கீடு பிரச்னை வரும்' என, குறிப்பிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் கோடைக் கால விடுமுறை அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த பிரச்னை குறித்து, ஜூலை, 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, அமர்வு உத்தரவிட்டுள்ளது.