GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பி.எட்., படிப்பு கட்டணம் எகிறும்

நாட்டில் உள்ள அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், மத்திய அரசின் என்.சி.டி.இ., நிறுவனத்திடம் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. தமிழகத்தில் பி.எட்., கல்லுாரிகள், என்.சி.டி.இ., அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்புடன் செயல்படுகின்றன.
கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இரண்டு ஆண்டு படிப்புக்கான உள்கட்டமைப்புகள் உள்ளதா என, என்.சி.டி.இ., ஆய்வு நடத்தவில்லை. நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வர காலதாமதம் ஆனதால், வாய் வழி அங்கீகாரம் வழங்கி, கல்லுாரிகளை கண்டும் காணாமல் விட்டு விட்டது.

கடந்த ஆண்டு பி.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர்கின்றனர். எனவே, இந்த ஆண்டு உள்கட்டமைப்பை ஆய்வு செய்யாமல், அங்கீகாரம் இல்லை என, என்.சி.டி.இ., திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்லுாரியிலும், என்.சி.டி.இ., குழுவினர் நேரில் சென்று சோதனை நடத்த உள்ளனர்.
இந்த சோதனைக்கான செலவாக, ஒவ்வொரு கல்லுாரியும், 1.5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த, என்.சி.டி.இ., திடீர் உத்தரவிட்டுள்ளது. இதனால், கல்லுாரி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இது குறித்து, கல்லுாரி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, 'இதுவரை சோதனைக்கு வரும் குழுவுக்கு, மறைமுகமாக ஏதாவது பரிசு கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால், இந்த முறை என்.சி.டி.இ., நேரடியாக கட்டணம் வசூலிப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகையை, மாணவர்கள் சேர்க்கையின் போது, அவர்களிடம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றனர். அதனால், இந்த ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பி.எட்., மாணவர்களுக்கான கல்வி கட்டணம் மறைமுகமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.