''அரசு ஊழியர்களுக்கான, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், இறக்கும் அரசு ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, மூன்று லட்சம் என்பதை, ஏழு லட்சமாக உயர்த்த வேண்டும்,'' என, தமிழக பட்டமேற்படிப்பு அரசு டாக்டர்கள் சங்க தலைவர், டாக்டர் லெட்சுமி நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், கூடுதல் பலன்களுக்கு வழி வகை செய்துள்ள, அதே நேரத்தில், ஊழியர்களின் சந்தா தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு ஊழியர்களிடம் இருந்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்காக, 150 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை, 180 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு என்பது, நான்கு லட்சமாக உள்ள நிலையில், இறப்புக்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.அதை அதிதகரிக்க வேண்டும். அது மட்டுமின்றி, இந்த திட்டத்தில், அரசு ஊழியர்களின் பெற்றோருக்கு பயன் இல்லை. அதே நேரத்தில், 25 வயதை தாண்டிய மகன், மகளுக்கும் இத்திட்டத்தின் பலன் கிடைக்காது என, தெரிவித்து இருப்பது ஏற்கக் கூடியதாக இல்லை. அரசு ஊழியர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பெற்றோரை, கடைசி கட்டத்தில் காப்பாற்ற வேண்டியதும், அவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பும், அரசு ஊழியர்களுக்கு உள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கு, நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சில பல குறிப்பிட்ட நோய்களுக்கு, 7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.