தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் டி.எம்., எம்.சி.எச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 189 இடங்கள்(82+107) உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் கடந்த 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த படிப்பில் 50 சதவீத அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் பிற மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, 50 சதவீதம் அரசு மருத்துவர்கள் அல்லாத மீதமுள்ள இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
எத்திராஜ் கல்லூரியில் நடந்தது
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்த படிப்புகளுக்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் மருத்துவ படிப்புகளான டி.எம்., எம்.சி.எச். ஆகியவற்றில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது.
தமிழகம் முழுவதுக்கும் ஒரே ஒரு மையம் இது மட்டும்தான். மொத்தம் இந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத 733 பேர் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
இந்த தேர்வை கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழு செயலாளருமான ஜி.செல்வராஜன் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
13-ந்தேதி தேர்வு முடிவு வெளியீடு
நுழைவுத்தேர்வை மொத்தம் 733 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 610 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 123 பேர் பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள். இன்று (நேற்று) நடைபெற்ற இந்த தேர்வில் 56 பேர் பங்கேற்கவில்லை.
இந்த தேர்வு முடிவுகள் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது