தமிழக அரசின், '104' சேவை மையத்தில், யோகா குறித்து ஆலோசனை தரும் சேவை துவங்கி உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமை என, வாரத்தில் இரு நாட்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். நிகழ்வு துவங்கிய முதல் நாளில், 1,160 பேர் பயன் பெற்றுஉள்ளனர்.
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை தரும், '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச யோகா தினத்தன்று, யோகா, இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனை தரும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 'செவ்வாய், வெள்ளிக்கிழமை என, வாரத்திற்கு இரு நாட்கள், யோகா, இயற்கை மருத்துவம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்' என, '104' சேவை மையம் அறிவித்தது. நேற்று முதல், இந்த சிறப்பு ஆலோசனை சேவை துவங்கியது. சென்னை, அரும்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த யோகா, இயற்கை மருத்துவ டாக்டர்கள், இருவர் ஆலோசனை வழங்கினர். 'நேற்று மட்டும், 1,160 பேர் ஆலோசனை பெற்றுள்ளனர். எதிர்பார்த்ததை விட, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது' என, சேவை மையம் தெரிவித்து உள்ளது.