மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு மெமோ: இணை இயக்குனர் பகிரங்க எச்சரிக்கை
''ஆகஸ்டுக்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, 'மெமோ' வழங்கப்படும்,'' என, இணை இயக்குனர் பாலமுருகன் பேசினார்.
சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, நேற்று, சேலம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இணை இயக்குனர் பாலமுருகன் பேசியதாவது: கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என, வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், சேலம் மாவட்டம், 19வது இடத்தில் உள்ளது. தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான். உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல்பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, 'மெமோ' வழங்கப்படும். வகுப்பறையை ஆர்வத்துடன் வைத்திருப்பதை, ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும்.
அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, 13 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பத்தாம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, 60 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், கலெக்டர் சம்பத், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் கலந்துகொண்டனர்.