அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.
ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல, தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும், காலத்தின் மாற்றத்தால் ஆங்கில புலமை இன்றியமையாததாக மாறிவிட்டது. தாய் மொழியில் கல்வி கற்றாலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறாமல் இருப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆங்கில வழி பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.
வருவாய் தடங்கல் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருவாய்க்கு ஏற்றவாறு குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் எதிர்காலம் பாதித்து விடுமோ என்ற ஏக்கம் ஒருபுறம்,ஆங்கில பள்ளிகளில் குழந்தைகளை அனுப்ப வருவாய் தடங்கல் மறுபுறம் என பரிதவிக்கின்றனர்.
இதை கருதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அரசு துவங்கியது. மாணவர்களின் சேர்க்கை பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் அதிகரித்தது.
ஏமாற்றம்தங்கள் குழந்தைகளுக்கும் அரசின் உதவியால் ஆங்கில புலமை கிடைக்கும் என ஏழை மக்கள் நம்பினர். தேவையான ஆசிரியர்களை நியமிக்காமல் எந்த வசதிகளும் மேம்படுத்தாமல் ஆங்கில வழி கல்வி துவங்கியது எந்த பயனும் தராமலே போயிற்று. ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே ஆங்கில வழி கல்வி செயல்படுகிறது.
தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க போதிய பயிற்சி வழங்காமல் அரசு மெத்தனம் காட்டி வருவதால் பெற்றோர் ஏமாற்றமடைகின்றனர். இதனால் இவ்வாண்டு பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகு வாக குறைந்துள்ளது. இவ்வாறு சென்றால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறன், நலன் கேள்விக்குறியாகி விடும்.