அனைவருக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டட்டும் என்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
சங்கடங்களையும் தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியுடன் முடியும். இதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, தாங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.
கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டட்டும். அன்பும், அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும். இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.