சேலம்: தமிழகத்தில், ஒவ்பது மற்றும், பத்தாம் வகுப்பு இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வித்திறனை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கணிதப்பாடத்தை செயல்முறை வடிவில் நடத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கணித உபகரணங்கள் ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
சேலம் மாவட்டத்தில், 956 கணிதப்பாட ஆசிரியர்களில், முதல்கட்டமாக , 300 பேருக்கு, மூன்று நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக, சேலம் சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழாவில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் பேசியதாவது:
கற்றுக்கொள்வதில், பாஸிவ் லேர்னிங், ஆக்டிவ் லேர்னிங் என இரண்டு வகை உள்ளது. உதாரணமாக, "போட்டோகிராபி' குறித்து பாடம் நடத்தி அதில் தேர்வு நடத்துவதை பாசிவ் லேர்னிங் எனலாம். இதில், போட்டோ எடுப்பது குறித்து புத்தக படிப்பாக தெரிந்திருப்பினும், நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருக்கும். அதேசமயம் கேமிராவை கொடுத்து, பலவித லைட்டிங்கில் படம் எடுப்பது, அதன் தரம் குறித்து விவாதிப்பது, கோணம் குறித்து கற்றுக்கொடுப்பது ஆகியவற்றை ஆக்டிவ் லேர்னிங் எனலாம்.
தற்போது வரை அரசு பள்ளிகளில் பாஸிவ் லேர்னிங் முறையில், கற்றுக்கொடுக்கப்படும் கணிதப்பாடத்தை, ஆக்டிவ் லேர்னிங் முறையில் மாற்றுவதற்காக, இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், கணிதப்பாடத்தை, யதார்த்த வாழ்வுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.