மானுட மகிழ்ச்சிக்கு பயன்படுவதே உண்மையான கல்வி என அண்ணா மேலாண்மை மைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.
அவர் ஆற்றிய சிறப்புரை: பள்ளிகளில் பாடங்களைவிட மகிழ்வாக இருப்பதற்கு கற்றுத்தருவதே முக்கியம். நாம் எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நாம் கற்ற கல்வியாலும், பெற்ற செல்வத்தாலும் பயனேதுமில்லை.
மகிழ்வாக இருப்பதால் என்ன பயன் எனக்கேட்கலாம். மகிழ்வாக இருந்தால் மதிப்பெண் முதல் அனைத்தும் நம்மைத் தேடிவரும். படிக்கும் பள்ளியின் பெருமையை நினைத்து மாணவர்கள் தினமும் மகிழ்வுடன் வந்தால் படிக்கும் பாடமும் மனதில் தங்கும்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசளிக்கும் போது எழும் கைதட்டல்களை விட விளையாட்டில் பரிசு பெற்றவரை சிறப்பிக்கும்போது எழும் கைதட்டல்கள் அதிகமாக இருக்கும். கல்வியில் சிறந்தவர் தனக்காக படித்துள்ளார். விளையாட்டில் சிறந்தவர் பள்ளிக்காக விளையாடியுள்ளார். ஆகவே பொதுநலன் சார்ந்து செயல்படுவோர் என்றும் சிறப்படைவர். அவர்கள் தங்கள் செயல் மூலம் தானும் மகிழ்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் மகிழ்விப்பர்.
மகிழ்வின் வழியைக் கற்றுத்தருவதே சிறந்த கல்வி. ஆகவே மானுடம் மகிழ மாணவர்கள் பாடுபடவேண்டும்.
கற்ற கல்வியை மானுடம் மகிழ பயன்படுத்தவேண்டும். நாம் செய்யும் செயல்களை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்துச் செயல்பட்டால் அவை நம்மில் எளிதில் தங்கிவிடும். கற்கும் கல்வியைக் கூட வாழ்வோடு இணைப்பது எளிதில் மனப்பாடம் செய்ய உதவும் என்றார்.