GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 30 ஆகஸ்ட், 2014

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

"உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு' என்ற தலைப்பிலான மூன்று நாள் பயிலரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் டி.கே. ரங்கராஜன் பேசியது:
பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினர், ஏழைகள், தனி நபர், ஒரு குழுவாக இருப்பவர்கள், பணக்காரர்கள் என அனைவருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு அளிக்கப்படுவதையே சமூக சமவாய்ப்பு என உலக வங்கி விளக்கமளிக்கிறது.
ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை தொடர்ந்து வரும் ஜாதி, மத பாகுபாடு உயர் கல்வியில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சமூக சமவாய்ப்புக்குத் தடைக்கல்லாக இருந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஜாதிகள் இந்தியாவில் இருக்கின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏழைகளாகவும், உயர் கல்வி வாய்ப்புப் பெற முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.
அதே நேரம், பரவலாகி வரும் உலகமயமாதல் கொள்கை, உயர் கல்வியிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் உயர்கல்வி செல்வதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில், முந்தைய அரசைப் போல் இப்போதைய பாஜக அரசும் உலகமயமாதல் கொள்கையை ஊக்குவித்து மேலும் பரவலாக்கி வருகிறது.
அதுபோல், பெரும்பான்மை சமூகத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே பாகுபாட்டை ஊக்குவித்து அதன் மூலம் தங்களுடைய தவறுகளை மறக்கடிக்கச் செய்யும் மன்மோகன் சிங் அரசின் கொள்கையையே, பாஜக அரசும் பின்பற்றுகிறது.
மாநில அரசுகளைப் பொருத்தவரை, உயர் கல்வி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் மிகப் பெரிய நிதியை ஒதுக்குவதோடு தங்களுடைய கடமையை நிறுத்திக் கொள்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினர் உயர் கல்வி பெறுவதிலும், அவர்களுடைய பொருளாதார நிலை மேம்படுவதிலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற அரசியலைமைப்புச் சட்டம் பிரிவு 46-ஐ நடைமுறைப்படுத்த மாநிலங்கள் தவறிவிடுகின்றன. அதுமட்டுமின்றி ஆண்-பெண் பாலினப் பாகுபாடு, உயர்கல்வி உள்பட அனைத்துத் துறைகளிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோல தாய்மொழியைத் தவிர்த்து, உயர் கல்வி என்றாலே ஆங்கிலம்தான் என்ற நிலையும் பின்தங்கிய சமூகத்தினர் சமவாய்ப்புப் பெறுவதற்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.
இந்த நிலை மாற வளர்ந்த நாடுகளில் உயர் கல்வியின் நிலை, வேலைவாய்ப்பு நடைமுறைகளை இந்தியா ஆய்வு செய்து, சிறந்த தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும்.
அனைத்து சமூகத்தினரும் உயர் கல்வி பெறுவதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் கல்விக் கடன், அதன் நோக்கத்தை எட்டியிருக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. கல்விக் கடனுக்கு வட்டி விதிக்கப்படுவதே இதற்கான காரணமாகும்.
வருங்கால தலைமுறையினரின் மீது செய்யப்படும் முதலீடாகத்தான் கல்விக் கடனை அரசு பார்க்க வேண்டும்.
எனவே, கல்விக் கடனுக்கு வட்டி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் அனைத்து சமூகத்தினரும் உயர் கல்வியில் சம வாய்ப்பைப் பெற முடியும் என்றார் அவர்.