சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசீலன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆர்.இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.
இதில், பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:
கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அவர்களைத் தேடி மேற்படிப்பு வாய்ப்புகள் வருகின்றன. அதன் பின்னர் உயர்ந்த இடத்துக்கு செல்பவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியை திரும்பி பார்க்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி கிராமத்தில்தான் உள்ளது. தற்போது விவசாயம் மட்டுமல்லாது விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
மாணவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அவர்களது உறவுகள் வாழ்த்துகிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் வாழ்த்தும் போது அதிக மகிழ்ச்சி ஏற்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற முடியும். ஆனால், கல்வி பயிலும் போது, வகுப்பில் படிக்கக்கூடிய அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். எனவே, மாணவ, மாணவிகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செங்கோட்டுவேலு, எம்.செல்வநாயகி, ஊர்ப் பிரமுகர்கள் மாணிக்கம், அங்கப்பன், செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.