ஆர்வமும், முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என இளம் வயதில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற சென்னை புட் கிங் கேட்டரிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.சரத்பாபு கூறினார்.
துடியலூர் வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஏ.முருகராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சரத் பாபு பேசியது: சென்னையில் ஒரு குடிசையில் வாழ்ந்த நான், இன்று இந்தியாவில் தொழில்முனைவோரில் "சிறந்த இளைஞன்' என்ற தேர்வு பெறுவதற்கு காரணம்
விடாமுயற்சியே. மிகுந்த வறுமைச் சூழ்நிலையில் இட்லி விற்று பிழைப்பு நடத்திய எனது அம்மா, என்னை இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமான ஆகமதாபாத்திலுள்ள ஐஐஎம் நிறுவனத்தில் படிக்க வைத்தார். இன்று அதே உணவு பொருள்களை விற்பதில் எங்கள் நிறுவனம் சிறந்த விளங்குகிறது.
வைராக்கியம், துடிப்பு, உழைப்பு போன்ற பண்புகளால்தான் வெற்றி சாத்தியமானது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண்பதோடு நின்று விடக் கூடாது. அது நனவாகும் வரை தூங்கக் கூடாது என்றார்.