இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசின், பத்ம விபூஷண் விருதுபெற்ற எம்.ஆர்.சீனிவாசன் கூறினார்.
இந்திய அணு மின் சக்தி கழக முன்னாள் தலைவரும், கூடங்குளம் அணுமின் நிலைய ஆலோசனை கமிட்டி தலைவருமான, எம்.ஆர்.சீனிவாசனுக்கு, 85, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வசித்து வரும் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மிக நீண்ட இடைவெளிக்கு பின், அணுசக்தி துறை சார்ந்து, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அணுசக்தி துறை என்பது, சவாலானது. இளைஞர்கள், அதிகளவில், ஆராய்ச்சி துறையில் முன்னேற வேண்டும்.
இத்தகைய ஊக்குவிப்புகளை, இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா இடையேயான, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நன்மை பயக்கும். இவ்வாறு எம்.ஆர்.சீனிவாசன் கூறினார்.
கடந்த, 1930, ஜன., 5ம் தேதி, பெங்களூருவில் பிறந்த, மாலூர் ராமசாமி சீனிவாசன், மெக்கானிக்கல் பொறியியல், அணுசக்தி பொறியியல் படித்துள்ளார். கடந்த, 1955ல், இந்திய அணுசக்தி துறையில் இணைந்து, டாக்டர் ஹோமி பாபாவின், முதல் அணுசக்தி ஆய்வில், தன்னை இணைத்து கொண்டார். 1959ல், இந்தியாவின் முதல் அணுசக்தி நிலைய கட்டுமான பணியின், முதன்மை திட்ட பொறியாளராக செயல்பட்டார்.
அணுசக்தி கழக தலைவர், அணுசக்தி கமிஷன் தலைவர், அணுசக்தி துறை செயலர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது சேவையை பாராட்டி, 1984ல், பத்மஸ்ரீ 1990ல், பத்ம பூஷண் விருதுகளை பெற்றார். 1992ல், பணி ஓய்வுக்கு பின், ஊட்டியில் தங்கியுள்ளார். அதன்பின், மாநில அரசின் அழைப்பை ஏற்று, கூடங்குளம் அணுமின் நிலைய ஆலோசனை கமிட்டி தலைவராக செயல்பட்டார்.