GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 16 ஜனவரி, 2015

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை வெல்ல கோச்சிங் வகுப்புகள் அவசியமா?




ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெல்ல, கோச்சிங் வகுப்பிற்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? அல்லது சுயமாகவே திட்டமிட்டுப் படித்து தேர்வை வென்றுவிட முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் உள்ளது.
2014ம் ஆண்டு புள்ளி விபரக் கணக்குகளை எடுத்துப் பார்க்கும்போது, ஆச்சர்யப்படும்படியான தகவல்கள் கிடைக்கின்றன. அந்தாண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேறியவர்களில், கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களைவிட, தானாகவே திட்டமிட்டுப் படித்தவர்கள்தான் அதிகம் என்பதுவே அந்த தகவல்.
மும்பை, டில்லி, கான்பூர், குவகாத்தி, காரக்பூர், சென்னை மற்றும் ரூர்கி ஆகிய IIT மண்டலங்களின் வாரியாக புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தைத் தவிர, இதர அனைத்து மண்டலங்களிலும், கோச்சிங் சென்றவர்களைவிட, சுயமாக படித்தவர்களே அதிகம் வென்றிருக்கிறார்கள்.
Joint Implementation Committee 2014 என்ற அமைப்பு, ஐ.ஐ.டி.,களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விபரங்களை சேகரித்து வெளியிட்ட அறிக்கையின்படி, JEE Advanced 2014 தேறியோரில், 52% பேர் சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்களாகவும், 48% பேர் கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
சுயமாக திட்டமிட்டு படித்து, தேர்ச்சி பெற்றவர்களை அதிகம் கொண்ட ஐ.ஐ.டி. மண்டலங்களாக, காரக்பூர்(60.14%) மற்றும் குவகாத்தி(63.08%) போன்றவை விளங்குகின்றன. இதர 4 மண்டலங்களிலும், சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்கள், 50%க்கும் மேலானவர்களாக உள்ளனர்.
மொத்தம் 7 மண்டலங்களுள், சென்னை மண்டலம் மட்டுமே விதிவிலக்காக உள்ளது. இங்கு மட்டுமே, சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்களைவிட, கோச்சிங் சென்றவர்கள் அதிகம்பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு பதிவு செய்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், அவர்களில் 63% பேர், சுயமாக திட்டமிட்டுப் படித்தக் குழுவை சேர்ந்தவர்கள். வெறும் 37% பேர் மட்டுமே கோச்சிங் வகுப்புகளை நாடியவர்கள்.
ஏறக்குறைய 14 லட்சம் மாணவர்கள் JEE Main 2014 தேர்வை எழுதியதில், வெறும் 27,152 மாணவர்கள் மட்டுமே Advanced தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 சுயமாக திட்டமிட்டுப் படித்தல் மற்றும் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லுதல் ஆகிய இரண்டிலுமே, பல நன்மைகள் உள்ளன. ஒரு மாணவர், கோச்சிங் வகுப்புக்கு செல்வதும், செல்லத் தேவையில்லை என்று முடிவு செய்வதும் அவரின் உள்ளுணர்வு சார்ந்த விஷயம்.
பொதுவாக, கோச்சிங் வகுப்புகளை மாணவர்கள் நாடுவதற்கு காரணம், போட்டித் தேர்வு என்பது ஒரு ஒப்பீட்டுத் தேர்வாக இருப்பதால்தான். உங்களின் சக தோழர்களைவிட, நீங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றியடைவீர்கள் என்ற ஒப்பீடு அங்கே செய்யப்படுகிறது. கோச்சிங் நிறுவனங்கள், அகடமிக் மேலாளர்களாக செயல்பட்டு, போட்டித் தேர்வுகளுக்கேற்ப, மாணவர்களின் படித்தலை திட்டமிட்டு, அவர்களை தயார்படுத்துகின்றன.
சுயமாக படித்தல் மற்றும் கோச்சிங் மூலமாக படித்தல் ஆகிய இரண்டு முறைகளிலுமே, மாணவர்கள் தங்களை ரெகுலர் முறையில் சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர், JEE pattern -ல், சில மாதிரித் தேர்வுகளை கட்டாயம் எழுதிப் பார்க்க வேண்டும். இந்த மாதிரித் தேர்வுக்கான சூழல், நிஜத் தேர்வைப் போன்றே இருக்க வேண்டும்.
 கோச்சிங் வகுப்பு செல்வது தவறில்லை என்றும், அதேசமயம், அதுமட்டுமே வெற்றிக்கு காரணமாகி விடாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் தேர்வில் வென்றவர்கள்.
தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டை சரியான முறையில் பேலன்ஸ் செய்து தொடர்வதற்கு கோச்சிங் வகுப்புகள் துணைபுரிகின்றன. அதேசமயம், கோச்சிங் வகுப்புக்கு செல்லாமலேயே, ஒருவர் தனது கடின மற்றும் திட்டமிட்ட முயற்சியின் மூலமாக மட்டுமே கூட, தேர்வை வெல்ல முடியும். அர்ப்பணிப்பு மற்றும் அக்கறை இல்லாமல், தேர்வை நிச்சயம் வெல்ல முடியாது.
ஒருவர் கோச்சிங் வகுப்பிற்கு சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி, கடின உழைப்பை நம்ப வேண்டும். கோச்சிங் வகுப்பில் சேர்ந்துவிட்டால் மட்டுமே ஒருவரால் வென்றுவிட முடியாது. இது அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்குமே பொருந்தும்.
கோச்சிங் வகுப்புகள் தேவையான ஆலோசனைகளையும், ஆதரவையும் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், கண்டிப்பாக கோச்சிங் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சுய தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதொரு அம்சம். ஒருவரின் கடின உழைப்பு, அவருக்கு இறுதியாக வெற்றியைத் தரும்.
சுயமாக படித்தல் என்பது, உங்களது தயாரிப்பு செயல்பாட்டை அளவிடவும், உங்களது கருத்தாக்கங்களை மறுப்பதிவு செய்துகொள்ளவும் உதவுகிறது. கோச்சிங் வகுப்புகள், ஒருவருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, சுயமாக படிக்கும்போது எழுகிற சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவுகிறது.
உங்களால், எந்தளவிற்கு முடிகிறதோ, அந்தளவிற்கு அதிக நேரத்தை, சுயமாக படித்தலுக்கு ஒதுக்குவது நல்லது.
போட்டித் தேர்வுகளில் சிறப்பான ரேங்க் பெற, கோச்சிங் வகுப்புகள் துணைபுரிகின்றன. அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் கொண்டவர்களுக்கு, சுயமாக படித்தல் மட்டுமே போதும். அதேசமயம், முதன்மையான ரேங்க் மற்றும் பிடித்த கல்வி நிறுவனங்களில் சேர்வது என்று வரும்போது, கோச்சிங் வகுப்புகளின் சேவை தேவையான ஒன்றாக மாறுகிறது.
சராசரி மாணவர்கள், சரியான முறையில் செயல்பட்டு, தங்களின் தடைகளைக் கடந்து முன்னேறி வந்து, தேர்வை வெற்றிகொள்வதற்கு, கோச்சிங் வகுப்புகள் பெரும் பலமாக விளங்குகின்றன.
கோச்சிங் வகுப்புகள், ஒரு மாணவரின் திட்டமிடப்பட்ட revision programmes -ஐ உறுதிசெய்து, அவரின் செயல்பாட்டை சரியான கால இடைவெளியில் மதிப்பீடு செய்கின்றன. மேலும், சரியான முறையிலான மாதிரித் தேர்வுகளை(mock tests) கோச்சிங் வகுப்புகள் நடத்துவதால், ஒரு மாணவர் தேர்வுக்கு முன்பான, முறைப்படியான பயிற்சியைப் பெறுகிறார்.
இதுதவிர, படிப்பின்போது எழும் சந்தேகங்களை, விரைவில் தீர்த்துக்கொண்டு, அதன்மூலம் அடுத்த நிலைக்குச் செல்ல, கோச்சிங் வகுப்புகளே ஆதாரம்.