ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறுகிறோம்; ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது, என, மாணவர்கள் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.
ஆசிரியர் தின விழாவையொட்டி, டில்லியில், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மத்தியில் பிரதமர்
நரேந்திர மோடி பேசியதாவது:
நரேந்திர மோடி பேசியதாவது:
என் அன்புக்குரிய குழந்தைகளே!
நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்திருக்கும் நண்பர்களே! இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகவும் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். மாணவர்கள், எதிர்கால கனவுகளுடன் இங்கே வந்திருப்பதை, அவர்களின் கண்கள் வாயிலாகக் காண்கிறேன். இன்று, ஆசிரியர் தினம். படிப்படியாக, ஆசிரியர் தினத்திற்குரிய முக்கியத்துவத்தை, இந்நாள் இழந்து வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும்பாலான பள்ளிகள், செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதில்லை; அந்நாளை, நினைவுகூர்வது கிடையாது. ஆசிரியர் சேவைக்காக வழங்கப்படும் விருது, குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையாக இருந்து ஆசிரியர் ஆற்றும் சேவையை, நாம் உணர வேண்டியது மிகவும் அவசியம்.
மரியாதை இல்லை: ஆனால், இப்போதுவரை, ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை. ஆசிரியர்களுக்கு, உரிய மரியாதையை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது. சிறந்த மாணவர்கள் கூட, ஆசிரியராக வர விரும்புவதில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து, நாம் விரிவாக ஆய்வு நடத்திட வேண்டும். உலகளாவிய அளவில், இன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கனவுகாண முடியுமா?
இந்தியா, வளர்ந்து வரும் நாடு. எனவே, சிறந்த ஆசிரியரை வெளிநாடுகளுக்கு அனுப்ப நாம் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் ஒவ்வொருவரும், சிறந்த ஆசிரியராக வர வேண்டும் என கனவுகாண வேண்டும். நான் சிறந்த ஆசிரியராக வந்து, என் நாட்டுக்கு சேவை செய்வேன் என, மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், நாட்டுக்காக, அளப்பரிய சேவையை ஆற்றினார். அவரது பிறந்த நாளை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
இதுபோன்ற நாளை, இன்று, பல்வேறு நாடுகள் கொண்டாடுகின்றன. சிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்டால், இரு காரணங்களை சொல்வர். ஒன்று, என் தாயார் பங்களிப்பு என்பர். இரண்டாவது, என் ஆசிரியர் பங்களிப்பு என்பர். எனவே, சாதித்த மனிதர்களின் வாழ்வில், ஆசிரியர் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
ஹீரோவான ஆசிரியர்
ஆசிரியர் வார்த்தைகள் தான், மாணவர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் ஹீரோவாக ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். ஆசிரியர் உடை பற்றி, மாணவர்கள் பேசுவர். ஆசிரியரின், நடை, உடையை, மாணவர்கள் அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். மாணவர், ஆசிரியர் இடையே உள்ள இந்த உறவை, மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள், கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளிகளே இருக்கக் கூடாது என, கடந்த 15ம் தேதி பேசினேன். அதிகமான பெண்கள் பள்ளிகள், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளன.
ஆசிரியரும், மாணவரும்
மாணவர்கள் பள்ளிகளிலும், கழிப்பறை வசதிகள் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சுற்றுப்புறத்தை, துாய்மையாக வைத்துக்கொள்ள மாணவரும், ஆசிரியரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்த பேச்சு, பிரதமருக்கு உகந்ததா என சிலர் எண்ணலாம். சில தினங்களுக்கு முன், நான் ஜப்பான் சுற்றுப்பயணம் சென்று வந்தேன். அங்கு ஒரு தம்பதி என்னை சந்தித்தனர். அவர்களில், கணவர் இந்தியாவைச் சேர்ந்தவர்; மனைவி ஜப்பானைச் சேர்ந்தவர்.
அவர்கள், என் சுதந்திர தின பேச்சைக் கேட்டதாகவும், அதில், துாய்மையின் முக்கியத்துவம் குறித்து நான் அதிக முக்கியத்துவமாக பேசியதாகவும் குறிப்பிட்டனர். ஜப்பானில், பள்ளியை துாய்மையைாக வைத்திருக்கும் பணியை ஆசிரியரும், மாணவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்பது விதியாகவே உள்ளது என தெரிவித்தனர்.
மேலும், இந்த நடைமுறையை, இந்தியாவில் ஏன் கடைபிடிக்கவில்லை எனவும், அவர்கள் கேள்வி எழுப்பினர். நான், நாட்டுக்கு திரும்பியதும், இதுகுறித்து பேசுவேன் என அந்த தம்பதியிடம் கூறினேன். எனவே, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்வதில், அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறந்த ஆசிரியர்
ஓய்வு பெற்றவர்களுக்கு, நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் டாக்டராக இருந்திருக்கலாம்; ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்திருக்கலாம்; ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்திருக்கலாம். நீங்கள், உங்கள் குடியிருப்பிற்கு அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, உங்கள் துறை சார்ந்த கருத்துக்களை, மாணவர்களுக்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்; இதை ஒரு தொண்டாக நினைத்து, ஆற்ற வேண்டும்.
படித்த ஒவ்வொரு இந்தியனும், தன்னார்வலர்களாக மாறி, ஒவ்வொரு வாரமும், அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, ஒரு பாடப்பிரிவை எடுக்க வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், சிறந்த ஆசிரியர் இல்லாத குறையை கண்டிப்பாக நீக்க முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
அரசியல் என்பது தொழில் அல்ல: ருசிகரமாக பதில் அளித்த மோடி:
அரசியல் என்பது தொழில் அல்ல; மக்களுக்கு செய்யும் சேவை. நம் நாடு, நம் மக்கள் என நினைத்து, அவர்களுக்கு செய்யும் சேவையாக கருதவேண்டும், என, மாணவர் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இடையே பேசினார். அப்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ருசிகரமாக பதில் அளித்தார். அவற்றின் விவரம்:
குஜராத்தில் உங்கள் வாழ்க்கையும், டில்லியில் பிரதமராக வந்த பிறகு, உங்கள் வாழ்க்கை முறையும் மாறியுள்ளதை எப்படி நினைக்கிறீர்கள்?
டில்லியில் இருப்பதற்கும், குஜராத்தில் வாழ்ந்ததற்கும், மிகப்பெரிய மாற்றத்தை உணரவில்லை. டில்லிக்கு வந்து, வீடு, அலுவலகம் என சென்று கொண்டிருக்கிறேன். இன்னும் டில்லியை சுற்றிக்கூட பார்க்கவில்லை.
அரசியல் தொழிலுக்கு வந்துள்ளீர்கள். இதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
முதலில் அரசியல் என்பது தொழில் அல்ல; மக்களுக்கு செய்யும் சேவை. நம் நாடு, நம் மக்கள் என நினைத்து, அவர்களுக்கு செய்யும் சேவையாகக் கருத வேண்டும். ஒரு ஊரில் 5 வயது பெண் குழந்தை, தன் 3 வயது தம்பியை சுமந்தபடி நடந்து சென்றாள். அதை பார்த்த மகாத்மா, ஏ குழந்தாய், நீயே சிறுமி. இப்படி மற்றொரு சிறுவனை சுமந்து செல்கிறாயே, எப்படி தாங்குகிறாய்... என கேட்டார்.
அதற்கு அந்த சிறுமி, இது என் தம்பி என்றாள். இது யார் என்று நான் கேட்கவில்லை; சுமையை எப்படி சுமக்கிறாய் என்று கேட்டேன் என்றார் மகாத்மா. அதற்கு அந்த சிறுமி மீண்டும், இது என் தம்பி என்றாள். மகாத்மாவிற்கு சிறுமி அளித்த பதில் விளங்க, சிரித்தபடி சென்று விட்டார். சிறுமியாக இருந்தாலும், என் குடும்பம், என் தம்பி என்று சொல்லும்போது, அரசியலுக்கு வந்துவிட்டால், அதை தொழிலாக நினைக்கக்கூடாது. இது ஒரு சேவை. மக்களுக்காக செய்யும் சேவையாக நாம் கருத வேண்டும். இதில் எத்தனை கடினங்கள் வந்தாலும் சமாளிப்பேன். இவ்வாறு, மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு, மோடி பதில் அளித்தார்.