ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, மே 30: ஆசிரியர் பணியில் நியமனம் பெறவும், பணியுயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆசிரியர் நியமனம் மற்றும் பணியுயர்வுக்கு தகுதித்தேர்வு கட்டாயமா என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 20 அல்லது 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பணியுயர்வு பெற விரும்பினால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்தச் சட்ட விதிகள் பொருந்தாது என வாதிடப்பட்டது.
மனுக்கள் நிராகரிப்பு
மறு ஆய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் நிராகரித்தது. அதே நேரத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக நீட்டித்தது.
அதன்படி, 2028 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகளை மாநில அரசுகள் விரைந்து நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இனிமேல் தகுதித்தேர்வு எழுதுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.