GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 12 மார்ச், 2015

‘பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தற்போது வேண்டாம்’: தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரிஆசிரியர் கழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கும் போதே அம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்,’ என, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ல் துவங்கின. மொழிப்பாடத்திற்கான தேர்வுகள் நேற்றுமுன்தினம் முடிந்தன. மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும்பணி தமிழகம் முழுவதும் மார்ச் 16,17ல் நடக்கிறது. அரசு தேர்வுகள்துறையின் நடவடிக்கையால் தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக விருதுநகர்மாவட்ட செயலர் மூர்த்தி கூறுகையில், ‘பிளஸ் 2 தேர்வுப்பணியில் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் போன்றவற்றில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அதற்கான பயிற்சி பெற்றதால் தேர்வுகள் பிரச்னையின்றி நடக்கின்றன.
இந்நிலையில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்த தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்களில் பலரை அப்பணியில் இருந்துவிடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப்பதிலாக புதிய ஆசிரியர்களை போதுமான பயிற்சியின்றி நியமிக்கும் போது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். இனிதான் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்க உள்ளன. அனைத்து தேர்வுகளும் முடிந்தபின்னர் விடைத்தாள்களை திருத்தும்பணியை துவங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.