தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில்,ஆக்சிஜன் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டால் தீர்வு காண, 'கால் சென்டர்' துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.எனவே, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள்,கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில், மருத்துவ ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகரிக்கும்.மாநிலத்தில் உள்ள, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள், விரைவாக மருத்துவமனைகள் வந்தடைய, தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்களில், மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக, சிக்கல் ஏற்பட்டால், அதை தீர்க்க, மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் கீழ், 24 மணி நேரமும் இயங்கும், கால் சென்டரை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்கிற, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.