ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் (ஐ.ஆர்.டி.டி.) இலவச தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி நடைபெறவுள்ளது. இப் பயிற்சியில் சேர பிப்.2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அக் கல்லூரியின் முதல்வர் (பொ) மயில்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 12 வார கால இலவச தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இதுதவிர பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு சீருடையும், உணவும் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.1.2015 அன்று 18 வயதுக்கு குறையாமலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த கல்வி நிறுவனத்திலும் மாணவராகவும் இருக்கக் கூடாது.
தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி கல்லூரியில் தானியங்கி ஊர்தியியல் துறை மையத்தில் நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், வெள்ளை தாளில் பெயர், தந்தை பெயர், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், கல்வி தகுதி, சாதி, ரேஷன் அட்டை எண், ஆதார் அட்டை இருந்தால் அதற்குரிய எண்ணை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் கல்வி தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண் பட்டியல், கல்வி நிலைய மாற்று சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை பிப்ரவரி 2-ம் தேதிக்குள் முதல்வர், சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி, தபால் பெட்டி எண்-2, வாசவி கல்லூரி அஞ்சல், ஈரோடு-16 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு, வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதுதொடர்பான தகவல்களை 0424-2533279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.