GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 12 ஜனவரி, 2015

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் 1 மற்றும் 2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தால் நடத்தப்படும் 38-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
விண்கலங்கள் இலக்கை சரியாக அடையவேண்டும் எனில் சரியான வேகம், திசை, நேரம் ஆகியவை திட்டமிட்டதாக இருக்கவேண்டும். ஆகவே மனிதர்களும் இலக்கை அடைய திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இதையே சுவாமி விவேகானந்தரும் குறிப்பிடுகிறார். அறிவியலும், ஆன்மிகமும் திட்டமிடலையே வலியுறுத்துகின்றன.
சந்திரனை நோக்கிச் செலுத்திய சந்திரயானும், செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யானும் வெற்றி பெற பலர் தியாகங்களைச் செய்துள்ளோம். அடுத்து ஆதித்யா விண்கலத்தை செலுத்தவும் தயாராகி வருகிறோம்.
எனது தந்தை எனது படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தார். சிறுவயதில் என்னை புத்தகம் படிக்க வைக்க, சிறுவர்களுக்கான புத்தகங்களை அவரும் படித்தார். படி,படி என எனது தந்தை என்னைத் தூண்டியதாலே நான் படிப்படியாக முன்னேற முடிந்தது.
கண்டதை படித்தால் பண்டிதனாவான் என்று பயனற்றவற்றைப் படிப்பது சரியல்ல. படிக்கவேண்டிய நூல்களையே படிக்கவேண்டும். உலகில் ஒவ்வொரு உயிரினமும் தோற்றத்திலிருந்து மாறாதிருóகக, மனிதன் மட்டுமே பல கட்டங்களாக மாறி பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கிறான். அதற்குக் காரணம் அவனது படிப்பறிவேயாகும்.
நான் ஆய்வில் அங்கீகாரம் பெற்ற நிலையில், கடும் முயற்சியால் பேச்சு, எழுத்திலும் தற்போது முயன்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். படிப்பதால் மட்டுமே நாம் சமூகத்தில் சிறப்பிடம் பெறமுடியும்.
தமிழகத்தில் படைப்பாளர், பதிப்பாளர், வாசகர்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் நாம் முன்னேறலாம் என்றார்