கோவை மாவட்டத்தில், தேர்வு சமயம் என்பதால், 95 சதவீத பள்ளிகளில் விளையாட்டு பாடவேளை அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்படுவதாக, உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மாதிரி தேர்வுகளும், பயிற்சிகளும் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
தினமும் படிப்பு, படிப்பு என்றிருக்கும் மாணவர்களுக்கு, மன உளைச்சல், அதீத கோபம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, கவனச்சிதறல் ஏற்பட்டு தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்படலாம்.
பள்ளிகளில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் உள்ள, விளையாட்டு பாடவேளையும் புறக்கணிக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சில பள்ளிகளில் விளையாட்டு பாடவேளை, தற்போது மாதிரி தேர்வுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
கோவையை சேர்ந்த உளவியல் நிபுணர் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு சமயங்களில், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை அதிகமாக, சந்திக்க நேரிடுகிறது. எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல், படிக்க வற்புறுத்துவதால், மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை உண்டாகி விடுகிறது. விளையாட்டு என்பது மாணவர்களுக்கு கவனத்தை அதிகரிக்க உதவும் ஆயுதமாகும். அதை பல ஆசிரியர்கள் உணர்வதில்லை. நன்றாக விளையாடிய பின், புத்துணர்ச்சியை மாணவர்கள் பெறுகின்றனர்.
இச்சமயங்களில், கடினமாக கருதும் பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்வர். பள்ளிகளில், விளையாட்டு பாடவேளையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்ககூடாது. மாணவர்களின் மன உளைச்சலை விளையாட்டால், அகற்றிவிடலாம். தொடர்ந்து படிக்க கட்டாயப்படுத்தும்போது, சராசரி மாணவர்களும் கவனச்சிதைவால், பின்தங்கி விடுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.