ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தத் தடையை, அரசு விடாப்பிடியாக அமல்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும், மாசை தவிர்க்கும் முயற்சியில், அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில், உணவகங்களில், 'பார்சல்' வழங்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, 12 பாரம்பரிய பொருட்களை, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு அறிவித்தபடி, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், 'பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும்' என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த எதிர்ப்பை மீறி, அரசு தடையை அமல்படுத்தியது. இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு தவிர்க்கும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது.