ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
அரசு மானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இந்த பதிவில், முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'
கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க, 100 ரூபாயும், ஆன்லைனில், இ - கேஒய்சி எனப்படும், தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை, 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கு, 30 ரூபாயும் செலுத்த வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.