GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 19 ஜூலை, 2018

5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும்.

அந்த மறுதேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளை ‘பெயில்’ ஆக்கி, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

கல்வித்தரம் தாழ்ந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது கல்விமுறை சீரழிந்து விட்டது, அதை மறுகட்டுமானம் செய்ய வேண்டும். ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், பெற்றோர், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தின. எனவே, நீண்ட சிந்தனைக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

இருப்பினும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா? வேண்டாமா? என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதுபோல், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எப்படி நடத்துவது என்பதையும் மாநிலங்களே முடிவு செய்யலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்திய அரசு அளிக்கும்.

தோல்வி அடைந்தாலும், எந்த மாணவரும் பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள்.